Friday, May 23, 2008

விடுதலைப் புலிகள் அமைப்பின் துணைத் தலைவர் மரணம்

விடுதலைப் புலிகள் அமைப்பின் துணைத் தலைவர் பாலசேகரம் கந்தையா இலங்கையில் மாரடைப்பால் இறந்தார். அவருக்கு வயது 42.

அவரது மறைவையொட்டி 3 நாள் துக்கம் கடைப்பிடிக்கப்படும் என்று விடுதலைப் புலிகள் அறிவித்துள்ளனர். இவர் விடுதலைப் புலிகளுக்குப் போர் தந்திரங்களை வகுத்துக் கொடுத்தவர். இலங்கை ராணுவத்துக்கு எதிரான பல போர்களில் நேரடியாகப் பங்கேற்றவர். இவர் முல்லைத்தீவு மாவட்டத்தைச் சேர்ந்தவர்.

மே 20-ம் தேதி பிற்பகல் 2 மணிக்கு அவர் இறந்ததாக விடுதலைப் புலிகள் அமைப்பு கூறியுள்ளது. விடுதலைப் புலிகளுக்கும் இலங்கை ராணுவத்துக்கும் இடையே போர் நிறுத்தம் இருந்தபோது, சிங்கப்பூரில் 2003-ம் ஆண்டு பாலசேகரம் கந்தையாவுக்கு இதய அறுவை சிகிச்சை நடந்தது. இந்நிலையில் அவருக்கு மீண்டும் இதயக் கோளாறு ஏற்பட்டு இறந்தார்.

கடந்த 2 ஆண்டுகளில் விடுதலைப் புலிகளின் முக்கிய தலைவர்கள் சிலர் இறந்து விட்டனர். இந்த அமைப்பின் அரசியல் ஆலோசகர் பாலசிங்கம் லண்டனில் 2006 டிசம்பரில் இறந்தார். அந்த அமைப்பின் அரசியல் பிரிவு தலைவர் தமிழ்ச் செல்வன், இலங்கை விமானப் படை தாக்குதலில் கடந்த ஆண்டு நவம்பரில் இறந்தார்.

தற்போது போர் நிறுத்தத்தை விலக்கிக் கொண்டு இலங்கை ராணுவம், போர் விதிகளைமீறி விடுதலைப் புலிகள் மீது தாக்குதல் நடத்ததுவதாக கூறிக்கொண்டு அப்பாவி மக்கள் மீது
கடும் தாக்குதலை நடத்தி வருகிறது. இதில் ஏராளமான அப்பாவி பொதுமக்கள் இறந்துள்ளனர். அவர்களின் சடலங்களை விடுதலைப் புலிகளின் சடலங்களாக இலங்கை அரசு கூறிக் கொண்டு வருகிறது.

No comments: